ங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோவிலின் தொன்மை கி.பி.1022. இக்கோவிலில் ஆடித்தபசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் (கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில்) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.

சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. (கோடு – கொம்பு) உக்கிரபாண்டியர் கோவிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத்தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.

குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது. இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைத்துள்ளது.

ஒற்றுமை குணம் உண்டாக, தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.