பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக ஒரு வெப் சீரிஸில் அறிமுகமாகவுள்ளார்.

‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தொடர் காசநோய் குறித்த விழிப்புணர்வு பற்றி இருக்கும் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சானியா மிர்ஸா கூறியுள்ளதாவது:

”நம் நாட்டில் இருக்கும் நீடித்த நோய்களில் ஒன்று காசநோய். காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களாக இருக்கின்றனர். அதைச் சுற்றியுள்ள தவறான கருத்துகளை மாற்றுவது மிகவும் அவசரத் தேவையாக உள்ளது.

அதை ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ தொடர் அழுத்தமாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்கிறது. நம் நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்தக் காசநோய் தற்போது கரோனாவால் இன்னும் மோசமடைந்துள்ளது.

செல்வாக்குமிக்க இடத்தில் இருக்கும் ஒருவர் என்ற வகையில், மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எனது இருப்பு ஒருவிதத்தில் உதவும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இந்தத் தொடர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.