சென்னை: ஒரு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற காவல்துறை  டிஜிபி.க்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே வழக்கில் ஆட்சி மாறியதும் மீண்டும் விசாரணை அமைப்பை மாற்றி, நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தி, மாறுபட்ட குற்றப்ப த்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் டிஜபியின் உத்தரவை ரத்து செய்ததுடன், தற்போது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை யையும் ரத்து செய்த நீதிமன்றம், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தது.

கோவையில்  கடந்த 2019ம் ஆண்டு  தனியார் நிறுவன நிர்வாக இயக்குநரின் வீட்டின் முன்பாக சிசிடிவி கேமரா பொருத்தி அங்குள்ள பெண்கள் மற்றும் அங்கு நடந்த தனிப்பட்ட நிகழ்வுகளை மறைமுகமாக கண்காணித்ததாக காவல்துறையினர், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த  2 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில்,  திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2021 ஜூன் 23 அன்று இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றியும், விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்தும் அப்போதைய டிஜிபி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ஏற்று விசாரணை நடத்துவது தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டார். ஆனால்,  சிபிசிஐடி போலீஸார் அதை கண்டுகொள்ளாமல், மீண்டும், அதே சம்பவத்துக்கு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன்,  கடந்த 2023 ஜன.6அன்று மற்றொரு குற்றப்பத்திரிகையை, முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு எதிர்மறையாக தாக்கல் செய்தனர்.  .அதில், இந்த குற்றச்சம்பவம் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறியிருந்தது.  (இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே வழக்கில்  ஆட்சி மாறியதும் விசாரணை தலைகீழாக மாறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்)

இதை எதிர்த்து,  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘ஒரே சம்பவத்துக்காக இரு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தமுடியாது என்று காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக சாடியதுடன்,  இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த முன்னேற்றங்கள் போலீஸாருக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள இணக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அதிர்ச்சியையும் ஏற்படுத்துகி்றது.

ஒரு குற்ற வழக்கில் ஒரு அமைப்புஎ தனது விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பிறகு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற டிஜிபிக்கு அதிகாரம் கிடையாது. எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள எதிர்மறையான குற்றப்பத்திரிகையை ரத்து செய்கிறேன்.

ரேஸ்கோர்ஸ் போலீஸார் தாக்கல் செய்துள்ள முந்தைய குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த வழக்கை 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.