மதுரை: இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், இரவு  மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகிறார்.  இன்றும் நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்டங்கள் துவங்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று திருப்பூர் , மதுரை மாவட்டங்களிலும் , நாளை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் நிகழ்ச்சியை முடித்துககொண்டு மதுரை வரும் பிரதமர் இன்று இரவு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதுடன், இரவு பள்ளியறை பூஜையிலும் கலந்துகொள்கிறார். இதையொட்டி,  மதுரை விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் விடுதி, திருப்பரங்குன்றம் சாலை, தொழில் அதிபர்கள் மாநாடு நடைபெறும் தனியார் பள்ளி, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வந்து இறங்கும் தனியார் பள்ளி ஹெலிபேட் மைதானம், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஓட்டல் போன்ற இடங்களுக்கு காரில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமர் மோடியின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பயணம் செய்யும் சாலைகளில் மத்திய கமாண்டோ படை போலீசாருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பல்லடத்தில் என்மண் என் மக்கள் யாத்திரையின்  நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் மதுரை வந்தடைகிறார்.

மதுரையில் உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்குகிறார். அதே பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறு, குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் அதிபர்களுடன் பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிவகங்கை ரோடு, ரிங் ரோடு, கப்பலூர் வழியாக திருநகர் அருகே உள்ள பசுமலையில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்கா நத்தம், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார். அங்கு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு மதுரை நகருக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வழியில் மீண்டும் பசுமலை நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை அதிகாலை இயற்கை எழில் சூழ்ந்த மலை குன்றில் அமைந்துள்ள ஓட்டலில் தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். காலை 8 மணி அளவில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரில் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இரவு தங்கினார். இந்த பயணத்தின்போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அதேபோல் தற்போது 2-வது முறையாக மதுரையில் தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கோவையில் போக்குவரத்து மாற்றம்.

திருப்பூரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு பயணத்தை ஒட்டி, பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றி பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, அண்ணாமலை ஆகியோரின் முழு உருவ கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, கோவை, திருப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  பொதுக் கூட்டத்துக்காக, தாராபுரத்தில் இருந்து கொடுவாய் – அவிநாசி பாளையம் – சுங்கம் மார்க்கமாக திருப்பூர் செல்லக்கூடிய கனரக வாகனங்களும், திருப்பூர் மாநகரில் இருந்து தாராபுரத்துக்கு சுங்கம் நான்கு சாலை வழியாக வரும் கனரக வாகனங்களும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த வழியாக செல்ல அனுமதி இல்லை.

அதேபோல், கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் சிந்தாமணிப் புதூர், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவிநாசி, பெருமாநல்லூர், செங்கப்பள்ளி, பெருந்துறை, திண்டல், கணபதிபாளையம், கொடுமுடியாக வழியாக செல்ல வேண்டும்.

பல்லடம் வழியாக மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நான்கு சாலை, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் வழியாக செல்ல வேண்டும். திருச்சி கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் கொடுமுடி கணபதிபாளையம், திண்டல், பெருந்துறை, செங்கப்பள்ளி, பெருமாநல்லூர், அவிநாசி, கருமத்தம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

திருச்சி, கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர்பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், தாராபுரம், குடிமங்கலம், பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கேரளா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், அமராவதி ரவுண்டானா, உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து பல்லடம், திருப்பூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், குடிமங்கலம் நான்கு சாலை, தாராபுரம், அவிநாசிபாளையம் வழியாக செல்ல வேண்டுமென, திருப்பூர் மாவட்ட போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இலகு ரக வாகனங்கள்: அதேபோல், கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் சூலூர், கலங்கல், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், வாவிபாளையம், புத்தரச்சல், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை செல்லும் இலகுரக வாகனங்கள், காங்கயம், படியூர், திருப்பூர், அவிநாசி வழியாகவும், திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் வெள்ளகோவில், காங்கயம், ஊதியூர், தாராபுரம், குடிமங்கலம் நான்கு சாலை வழியாகவும் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம் சூலூருக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கும் பிரதமர் இன்று வருவதையொட்டி, கோவையில் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பாலக்காட்டிலிருந்து வாளையாறு வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் வழியாக செல்ல வேண்டும்.

கோவை மாநகரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் வழியாக செல்ல வேண்டும். கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, எல் அன்ட் டி பைபாஸ் சாலை, பட்டணம் பிரிவு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் வழியாக செல்லலாம் என காவல்துறையினர் அறிவித்து உள்ளனர்.