சென்னை: சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்குக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை  மற்றும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு”  என்ற தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க தடைக்கோரி கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஸ் மனுஷ், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது, தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை அண்ணாமலை பரப்பியதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.‘

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக  அண்ணாமலை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் வெளியான அந்த வீடியோவால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலையின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, பியூஷ் மனுஷ்க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு பல கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.