சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழில், காவி உடையில் திருவள்ளுவர்  படம் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் திருநாள் விழா” நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருவள்ளுவர் உடை விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெய்வப்புலவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவரின் புகைப்படம் சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கருப்பு வெள்ளை புகைப்படங்களில்  ஆடை தொடர்பான விவாதங்கள் எழாத நிலையில், சமீப காலமாக ஆடை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திமுக அரசுதான்,தெய்வபுலர் திருவள்ளுவர் படத்துக்கு, வெள்ளை உடை அணிவித்தாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. அதையே தமிழ்நாடு அரசும் அங்கீகரித்துள்ளது. ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அதை ஏற்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில்,  “அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில், ‘அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது. அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த கடந்த ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது மீண்டும் காவி உடையில் திருவள்ளுவரின் புகைப்படத்துடன் அழைப்பிதழ் வெளியான விவகாரம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.