சென்னை

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2021-22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், இந்தியத் திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்குச் சென்னை, ராணி மேரி கல்லூரியில் முழு உருவச் சிலை அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ்குமார், கோவை முன்னாள் மாநகராட்சி மேயர் ஆர்.வெங்கடாசலம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.