சென்னை:
திமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்கியதில் 9,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாணிக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வலிங்கம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலின்போது திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிக்காகப் போட்டியிட விண்ணப்பித்தேன். ஆனால் தேர்தல் நடத்தாமலேயே வேறு ஒருவரைச் சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுத்தனர். இதுபோன்று கடந்த ஆட்சியில் 95 சதவிகிதக் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தாமலேயே அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த காலத்தில் ஆளும்கட்சி நிர்வாகிகள் தலைவராக இருந்ததால் அவர்கள், தங்களுடைய பினாமிகளுக்கு கடன் அளித்தனர். இதனால் கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக ஆட்சியில் கடன் மோசடி நடைபெற்றுள்ளது. தற்போது தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ள கூட்டுறவுச் சங்க பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி என ரூ.11,500 கோடியில் அதிமுகவைச் சேர்ந்தவர்களே அதிகம் பயன்பெற்றுள்ளனர். எனவே இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாகத் தமிழக அரசு விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.