சென்னை:  சென்னை சாலைகளை புதுப்பிக்க ரூ.810 கோடியில் டெண்டர் கோரப்பட்டு இருப்பதாக என தமிழ்நாடு  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.

சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.810 கோடியில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்திதார். அப்போது,  அவர் கூறியதாவது,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கியது முதல் ஸ்டாலின் முதல்வராகும் வரை மொத்தம் 4.20 கோடி மக்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், மேலும் 3 கோடி பேருக்கு குடிநீர் அளிக்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். அங்கு சோதனை அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது. பொறியாளர்களுக்கு பழைய வாகனங்களை மாற்றி, புதிய வாகனங்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, 10 வாகனங்கள் தற்போது வழங்கப்படுகிறது. 20 வாகனங்கள் விரைவில் வழங்கப்படும்.

கோவையில் 110 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. மதுரையில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும். திருப்பூரில் 120 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் குடிநீர் திட்டம், ஒகேனக்கலில் ரூ.10 ஆயிரம் கோடியில் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. 117 இடங்களில் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. முதல்வர் அனுமதியளித்துள்ள நிலையில் பணியாளர்கள் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கனமழை பெய்து வெள்ளம் வந்துள்ள நிலையில், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. மற்ற பகுதிகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. காவிரி படுகையில் மட்டும்தான் இந்த ஆண்டு தண்ணீர் குறைவாக இருந்தது. வடகிழக்கு பருவமழையின்போது நிலத்தடி நீர் பெருகிவிட்டதால், அங்கும் சமாளித்துவிடலாம்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும். பாதாள சாக்கடை பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியின்போது,  நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தகவல்…