சென்னை: கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை  வழங்கும் திட்டத்தை நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,744 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அதற்கான தொடக்க விழா நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்,  கோயில்களில் தலைமுடி இறக்கும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, 349 கோயில்களில் இருந்து 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, தேயிலைத்தூள் உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.