சென்னை : தூத்துக்குடியில் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள  அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலு நேற்றிரவு (31.1.2021 அன்று) காவல் நிலையத்தில்  பணியில் இருந்தபோது, ஏரல் கடைவீதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ஒருவர் தகராறு செய்வதாக கடையின் உரிமையாளர் தொலைபேசி வாயிலாக தகவல் தந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன்சுப்பையாவுடன் அக்கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பி வைத்து விட்டு, இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரும் இன்று (1.2.2021) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்திரமடைந்த முருகவேல் என்பவர், சரக்கு வேனை ஓட்டிச்சென்று, இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில், உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியில் ஈடுபட்டு இருக்கும் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு சிறப்பினமாக,  ரூபாய் 50 லட்சமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையாக்கு ரூபாய் 2 லட்சமும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை  சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.