சென்னை; பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை  சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

எண்ணூரில் அனல் மின் நிலையம் விரிவாக்க பணிகளுக்காக  4,442 கோடி ரூபாய்க்கான டெண்டரை பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளது. அதனால், இதுதொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெல் நிறுவன தொழிற் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை எண்ணூரில் அனல்மின் நிலையம் உள்ளது. இது   1970ஆம் ஆண்டு மின்உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நான்கு அனல்மின் நிலையங்களுள் ஒன்றான இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிலையத்தின் முழு திறன் 450 மெகாவாட்டு ஆகும்.

இந்த   அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தில் (Expansion of thermal power plant at Ennore), 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ (Tangedco) கடந்த 2019ஆம் ஆண்டில் டெண்டர் கோரியது.

இதில் பங்கேற்ற மத்திய அரசின் பெல் நிறுவனம் 4,957 கோடியே 11 லட்ச ரூபாய்க்கும், பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்கிற தனியார் நிறுவனம் 4,442 கோடியை 75 லட்ச ரூபாய்க்கும் டெண்டர் கோரிய நிலையில், குறைவான தொகை குறிப்பிட்டிருந்த பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. அதன்படி,  மொத்த தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டுமென்ற டெண்டர் நிபந்தனைப்படி, உத்தரவாதத் தொகையை 16 மாதங்களாக செலுத்தாததால் டெண்டர் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23ஆம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பிஜிஆர் எனர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடர்ந்திருந்த வழக்கில், மீண்டும் டெண்டர் கோரக்கூடாது எனவும், தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பிஜிஆர் நிறுவனத்திற்கே வழங்கி டான்ஜெட்கோ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற் சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் வங்கி உத்தரவாதத்தை பிஜிஆர் செலுத்ததாததால், அடுத்த இடத்தில் இருந்த பெல் நிறுவனத்திற்கு தான் டெண்டர் கொடுத்திருக்க வேண்டும், அவ்வாறு கொடுக்காமல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல்வர் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில், டெண்டரை பிஜிஆர் நிறுவனத்திற்கே கொடுக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டரை ஒதுக்கியது சட்டவிரோதமானது திட்டத்தை அமல்படுத்துவதில் 3 ஆண்டுகள் கால தாமதத்தால் டான்ஜெட்கோவிற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், டெண்டர் விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

டெண்டர் ஒதுக்கியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ தரப்பில், இந்த வழக்கை தாக்கல் செய்ய தொழிற்சங்கங்களுக்கு அடிப்படை உரிமை இல்லை என்றும், புகாரில் முகாந்திரம் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.