சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்,  கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ வாதத்தைத் தொடர்ந்து, வழக்கு  மார்ச் 20ந்தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த  2015-ம் ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் முக்கிய டைரி ஒன்றி சிக்கியது. அதில் இருந்த தகவலின்படி,   அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது. அவர்களும் முறைகேடாக குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்தாக திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து,   கிடங்கு உரிமை யாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளி வந்தனர்.

இந்த வழக்கில், கடந்த ஆண்டு சிபிஐ தரப்பில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை கூடுதல் கால கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.