சென்னை: முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின்,  இன்று அதற்கான திட்டத்தை 5 பயனர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும், அதற்காக 5.42 கோடி ரூபாய் ஒதுக்கியும் முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றார்கள். அவர்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததை அறிந்து, அவர்களின் நலனைக் காத்திட, முதல்வர் ஸ்டாலின் சிறப்பு நேர்வாக, முதல் முறையாக முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்குத் தலா 4000 ரூபாய் வீதம் மொத்தம் 5 கோடியே 42 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை வெளியிட்டார்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறைச் செயலாளர் ஜகந்நாதன், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரக இயக்குநர் ஜெஸிந்தா லாசரஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.