சென்னை: பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி; பனை வெல்லம் ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட், மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று, அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரங்களை காக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். பனை மரங்களை வேரோடுவெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

பனை ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ரேஷன் கடைகளில் பனை பொருட்கள், பனை வெல்லத்தை நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,  என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.