அமிர்தசரஸ்,
புதிய 2000 ரூபாய் நோட்டு போலவே, பிரிண்ட் போட்டு புழக்கத்தில் விட்ட 2 பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.
இந்த நோட்டு பார்ப்பதற்கு லாட்டரி சீட்டு போல இருப்பதாகவும், பிங்க கலரில் இருப்பதால் பெண்களுக்கு பிடித்த கலராக  இருப்பதாகவும் பலர் கூறினர்.
fake-note
ஆனால் இந்த 2000 ரூபாய் நோட்டு, வழக்கமான  ரூபாய் நோட்டுகளை விட வடிவத்திலும், வண்ணத்திலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது.
ஆகையால்,
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போல கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாது என்றும், அந்த அளவுக்கு அதில் புதிய நவீன தொழில் நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கூறியது.
ஆனால், நம் மக்கள் எம்மாத்திரம்….?  புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகமான மறுநாளே கர்நாடகாவில் கள்ள நோட்டு வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் ஒருவர், புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, ஒரிஜினல் நோட்டு போல பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில்  பஞ்சாபில் இரண்டு பேர் கத்தை கத்தையாக புதிய 2000 ரூபாய் கையில் வைத்துக்கொண்டு புழக்கத்தில் விட்டனர்.

கள்ளநோட்டு தயாரித்தவர்களுடன் (முகம் மூடப்பட்டுள்ளது) போலீசார்
கள்ளநோட்டு தயாரித்தவர்களுடன் (முகம் மூடப்பட்டுள்ளது) போலீசார்

இதனால் சந்தேகப்பட்ட கடைக்காரர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் உபயோகப்படுத்தி வருவது கள்ளநோட்டுதான் என்ற ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்ததும் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில்,  அவர்கள் இருவரும  அமிர்தசரசில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிசிவிண்ட் எனும் ஊரில் ரகசிய இடத்தில் அவர்கள் இருவரும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் தயாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
முதலில் அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்துள்ளனர். பிறகு அதை ஏராளமாக பிரிண்ட் எடுத்து நவீன கட்டிங் எந்திரம் மூலம் வெட்டி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போலவே மாற்றி விட்டனர்.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம் இன்னமும் சகஜமாக பயன்பாட்டுக்கு வராததால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி  அவர்கள் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளனர்.
அவர்கள்  பெயர்  ஹர்ஜிந்தர்சிங், சந்தீப் சிங். அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன் படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கே னிங் மெஷின், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.