சென்னை: ஐஐடி, எம்ஐடி, என்ஐடி உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு ரூ.2லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இதற்கு தகுதியானவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துறை அதிகாரிகளை தொடர்புகெண்டு விவரம் பெறலாம்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 15ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM), ஐஐஐடி (IIIT), என்ஐடி (NIT) மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள்,  கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.00 இலட்சம்  உதவித்தொகை பெறலாம். முதற்கட்டமாக 100 மாணவ/மாணவியர்களுக்கு 2019-20ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன்படி, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் நபர்

1. தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவிகளாக இருத்தல் வேண்டும்.

2. பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் ஐஐஐடி ,என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலவேண்டும்.

3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2020-21ம் கல்வி ஆண்டிற்கான புதியது (Fresh) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 04.01.2021 முதல் 15.02.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை -5, தொலைபேசி எண். 044-28551462 மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com.