சென்னை: நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி உள்ளது.  ஏற்கனவே 3 மாநிலங்களில் இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ள முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதற்கான நடைமுறைக்ள் ஏற்கனவே வகுக்கப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி தடுப்பூசிக்கான தேசிய நிபுணர் குழுவை அமைத்த பின்னர், நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பு கொரோனோவுக்கு எதிரான வரவிருக்கும் தடுப்பூசி இயக்கத்திற்கான தயாரிப்பு பணிகளை நாங்கள் தொடங்கினோம்.

சாத்தியமான பயனாளிகளின் விவரங்கள், தடுப்பூசிக்கு முன்பும், தடுப்பூசிக்கு பின்பும் பின்பற்றப்பட வேண்டிய வழிகள் ஆகியவை நோக்கி நகர ஆரம்பித்தோம். பிபிஇ கருவிகள், N 95 முகக்கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தில் பிரதமர் அளித்த உத்வேகத்தின் காரணமாக விஷயங்கள் சிறப்பாக மாற்றப்பட்டன என்று கூறினார்.