சென்னை:

சிய போட்டியில் தங்கம் வென்ற  தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக, அமமுக, காங்கிரஸ் கட்சிகள் பரிசுத் தொகை அறிவித்துள்ள நிலையில், அதிமுக இதுவரை ஏதும் அறிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் ஏதும் அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதும் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக சார்பில் கோமதிக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்து, அவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைப்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வழிவகை செய்து தந்துள்ளார்.

அந்த வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிமுக சார்பில் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கோமதி மாரிமுத்து அவர்களுக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  மேலும் இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.