சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

கடந்த வாரம் கரையைக்கடந்த புயல் வெள்ளம் காரணமாக, தெலுங்கானா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 கோடி வழங்கப்படும்  என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.