சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைத்து தமிழகஅரசு உத்ததரவிட்டு உள்ளது.

அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், 69% இட ஒதுக்கீடு வழக்கை எதிர்கொள்ளவும் தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான புள்ளி விவரங்களை திரட்டி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.A.குலசேகரன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதன், அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை, எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அதன் அடிப்படையில் புள்ளி விபரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும். மேலும், சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.