ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் சிக்கியுள்ளான். அவனை மீட்பதற்கான பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக வெளிநாட்டு ரிக் இயந்திரங்களை வைத்து மீட்பு பணிக்காக துளையிடும் பணி நடைபெற்று வந்த நிலையில், இரு இயந்திரங்களாலும் 45 அடிகளுக்கு மேல் துளையிட முடியாத நிலை இருந்துவந்தது.

இந்நிலையில், தற்போது 1200 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடந்து வருகிறது. இம்முயற்சியின் மூலம் கடினமான பாறைகளை உடைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறைகளில் போர்வெல் இயந்திரம் மூலம், மூன்று துளைகளை போடப்பட்ட பின்னர், மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.