சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளிலும் அரசு அறிவித்துள்ள இடஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப் பிரிவு – 31%, எஸ்டி – 1%, எஸ்சி – 18% , SCA இருப்பின் அவர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு, எம்பிசி – 20%, பிசிஎம் – 3.5%, பிசி – 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும்.

மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.