சென்னை: ஜனவரி 26ந்தேதி குடியரசுத் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கடற்கரை சாலை உள்பட  அருகே உள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  குடியரசு தினத்தையொட்டி நடைபெற உள்ள கலாச்சார நிகழ்ச்சிகள் ஒத்திகை காரணமாக,  சென்னை காமராஜர் சாலை (கடற்கரை சாலை) ஜனவரி 20, 22, 24 மற்றும் 26 ஆகிய 4 நாட்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  அதாவது குறிப்பிட்ட  4 நாட்களில் காலை 6 முதல் 10 மணி வரை இந்த சாலையில், வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகே தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தமாக  மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், வாலாஜா பாயிண்ட் , அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

குடியரசு தினத்தையொட்டி 20,22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடைபெறவிருப்பதாலும், குடியரசு தினத்தன்று நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாலும் போக்குவரத்து  மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.