சென்னை: ஜூலை 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை கொடுத்துள்ளது.

கடந்த மாதம் (ஜூலை) 23- ந்தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழு தொடர்பாக, ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில்  சென்னை உயர்நீதி மன்ற அமர்வு பரபர  தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஏற்கனவே செயற்குழுவில், அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், தடையை மீறி புதிய தீர்மானம் இயற்றப்பட்டதுடன், அந்த 23 தீர்மானங்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்தும், ஜூலை 11ந்தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டது. இதில், பொதுக்குழுவுக்கு எதிரனா வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆஜராகி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தாண்டி வேறு தீர்மானங்கள் இயற்றக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அவைத் தலைவரை நியமித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே அவமதிப்பதாக உள்ளது. அது மட்டுமில்லாமல் மீண்டும் பொதுக்குழுவை 11-ந்தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர். இது சட்டவிரோதம். எனவே இந்த பொதுகுழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவைத் தலைவரை தேர்வு செய்த தீர்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பழைய வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும். டிவிஷன் பெஞ்சில் முறையிட முடியாது.

தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை மட்டுமே விசாரிக்கிறோம். தடையை மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினாலும் அவைத் தலைவர் இல்லாமல் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்? எனவே இதில் கோர்ட்டு அவமதிப்பு என்ற கேள்வி எப்படி எழும்.

அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிட முடியாது, எனவே வருகிற 11-ந்தேதி கூடும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.