சென்னை: சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துகள்  சுமார் 54% குறைந்துள்ளது என   மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

32ஆவது சாலை பாதுகாப்பு மாதம் நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புத்தகம், காலண்டர், பாடல் ஆகியவற்றை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,  , “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘என்ற பெயரில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த மாதம் 17ஆம் தேதி வரை சென்னை முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்தவர்,  சாலை விபத்தில் ஒரு உயிர் போனால் 3 சதவிகித தேசிய உற்பத்தி திறன் குறையும் என்றார்.

மேலும்,  சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 54 சதவிகித சாலை விபத்துகள் குறைந்துள்ளன, இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  குறிப்பிட்டு, மற்ற மாநிலங்களும் சாலை பாதுகாப்பு குறித்து தமிழ்நாட்டிடம் கற்க வேண்டும் என கூறியதாகவும்,  மக்களிடையே சாலை விபத்துக்கள்  தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால்,  முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு 80 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளன.

ஜீரோ வையலேஷன் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றவர், பொதுமக்களே முன்வந்து சாலை விதிகளை மதித்தால் மட்டுமே சாலை விபத்துகள் நடப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும். சாலை விபத்துகள் நடைபெறாத நகரமாக சென்னையை மாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.