அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வலது கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக அவர் விளையாடமாட்டார் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ அவர் மீண்டும் எப்போது அணியில் இடம்பெறுவார் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

ஆல்ரவுண்டரான ஜடேஜா பந்துவீசும் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது முழங்கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அவர் காலவரையின்றி ஓய்வில் இருப்பார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை அவருக்கு ஓய்வு தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் ஜடேஜா-வின் உடல்நிலை மற்றும் ஒய்வைப் பொறுத்து மூன்று மாதங்களில் அவர் விளையாட துவங்குவார் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனினும், ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜடேஜா டி-20 உலக கோப்பை போட்டிகளில் இடம்பெறாதது ரோஹித் சர்மா-வுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் கூறப்படுகிறது.