துபாய்:
டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் “4” சுற்று போட்டிகளுக்கு அணிகள் தயாராகியுள்ளன. முன்னதாக நடந்த லீக் சுற்றில், ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி முதலாவது அணியாக சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறியது.

இதேபோல், ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்தியா ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன்பிறகு, வங்க தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணியும், ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணிகளும் சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இன்று 2-வது முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு ஏழரை மணிக்கு தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் அதே துபாய் மைதானத்தில் நடக்கிறது.