சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 14%லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த வாரம் ரேசன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். இதனால், ரேசன் கடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுத்துறை அதிகாரிகள் ரேசன்கடை ஊழியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில்,  ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வை 14% லிருந்து 28%ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும்  இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.73 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.