சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ளவர்கள், தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அனுமதி வழங்கி அறிவித்துள்ளது.

அரியர் மாணவர்கள்  நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்க இணையதளம் வாயிலாக  விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக 5,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனதெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

”அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி, பொறியியல் படிப்பில் நீண்ட ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத் தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம்.

சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும், வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் இன்று (செப்.24) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் முறை, தேதி, தேர்வு மையங்கள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 4 ஆகும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://coe1.annauniv.edu/aucoe/pdf/max_period_notification/Notification_Maximum_Period_Exhausted_Cand_ND2021.pdf