மும்பை பாந்திராவில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வாஸ்த்து இல்லத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

மறைந்த இந்தி நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூருக்கும் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்டிருக்கும் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்று மெஹெந்தி பங்க்ஷனுடன் திருமண சடங்குகள் துவங்கியது, ஆலியா பட்டை திரையுலகில் அறிமுகம் செய்த கரண் ஜோகர் அவருக்கு முதன் முதலாக மருதாணி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளை விருந்தினர்கள் யாரும் தங்கள் மொபைலில் படம் எடுத்துவிடாத படி அவர்களின் மொபைலில் பாதுகாப்பு பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டினர்.

இதனால் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ரகசியமாக இருந்தது, திருமணம் முடிந்ததை அடுத்து இன்று மாலை தங்கள் வீட்டின் முன் குவிந்திருந்த பத்திரிகையாளர்கள் முன்பு தோன்றிய ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடி தங்களுக்கு திருமணம் ஆனதை உறுதி செய்தனர்.

திருமண நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் மகள் ஸ்வேதா நந்தா, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, கரீனா கபூர், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.