ராமேஸ்வரம்

டந்த 2 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. 

இலங்கை கடற்படை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைக் கைது செய்தது. அந்த நாட்டு நீதிமன்றம் பலரை நிபந்தனைகளுடன் விடுவித்தது. ஆயினும்  ராபர்ட், ஜான் பிரிட்டோ, சாம்சன், நெல்சன், நம்பு முருகன் ஆகிய 5 மீனவர்கள், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் எதிரே நேற்று முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 8-வது நாளாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. அரசுக்கு இதனால் சுமார் ரூ.7 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது . மீனவர்களுடன் திமுக  மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களைச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து மீட்டுக் கொடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.  இதையொட்டி மீனவர்கள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.