ராமேஸ்வரம்

டந்த 11 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 68 பேரை கைது செய்தனர். அவர்கள் சென்ற 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு இலங்கை கடற்படையால் கைதான 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 11 நாட்களாக நடைபெற்றது.  இதற்கிடையில்  இந்த 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.  இந்த மனு தற்போது விசாரணையில் உள்ளது.    தவிர இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் உள்ளிட்டோர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.   இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை திரும்ப பெறுவதாக  மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.  வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க உள்ளனர்.