சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை குறித்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மதியம் முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பெய்து வரும் திடீர் மழை காரணமாக மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த மழை, காரணமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் மழை நீர் தேங்கியதால் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும்  தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மழை குறித்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.