இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களில் ஈடுபடக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்தியன்-2 (Indian-2) படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை விளக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

கொரோனா தொற்று, படப்பிடிப்பின் துவக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து , கமலின் ஒப்பனை தொடர்பான விஷயங்களில் எற்பட்ட தாமதம் என பல விஷயங்களை முன்னிறுத்தியுள்ளார் ஷங்கர்.

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார்.

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான் எனவும், இதன் காரணமாக தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கெதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷங்கருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷங்கருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அங்குள்ள திரைப்பட வர்த்தக சபையினர் ஷங்கருக்கு தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கர் தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண் தேஜா நாயகனாக நடிக்கும் பன்மொழித் திரைப்படத்தின் வேலைகள் குறித்தும், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் ‘அந்நியன்’ திரைப்படத்தின் ரீமேக் வேலைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜுவை ராம் சரண் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஷங்கருடனும் அவ்வபோதும் பேசி வரும் ராம் சரண், தனது படத்தை முடித்து விட்டே ஷங்கர் அடுத்த படத்துக்குச் செல்ல வேண்டுமென்று உத்தரவாதம் கோரியதாகவும் தெரிகிறது.