சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 4வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய மத்தியஅரசு மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு பரோல் வழங்கி வருகிறது. ஏற்கனவே பேரறிவாளன், ரவிச்சந்திரன் பரோல் பெற்ற நலையில்,  வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்த நளினியும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தார்.

தனது தாயார் பத்மாவதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று நளினி தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே 3 முறை அவரது பரோல் நீட்டிக்கப்பட்ட நிலைல், தற்போது 4வது முறையாக மேலும் 30 நாள் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நளினியின் பரோல் இன்று (27ந்தேதி) முடிவடைய இருந்த நிலையில், தனது தாயார் பத்மா தனது உடல்நிலையை இன்னும் சரியாகவில்லை என்று காரணம் காட்டி நளினியின் பரோல் நீட்டிக்க கோரிக்கை மனு கொடுத்தார். அதை பரிசீலித்த தமிழகஅரசு அவருக்கு  4-வது முறையாக பரோலை  நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது.  இதன்படி 26.5. 2022 வரை 30 நாட்கள் நளினிக்கு வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.