காஞ்சீபுரம்:

ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், இளைஞர்கள் எழுச்சி ஆண்டு விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“உச்சக்கட்ட ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசில் நடக்கும் ஒவ்வொரு ஊழல் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே முழுமையாக மக்களிடம் கொண்டு செல்கிறது.

தமிழக அரசின் ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் பா.ம.க. சார்பில் இரண்டு முறை மனு அளித்துள்ளோம்.  அதனை உன்னிப்பாக படித்த ஆளுநர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆளுநர் தற்போது தமிழகத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வினால் எந்தப்பலனும் கிடையாது.  அவர் ஆய்வு செய்கிறார். முதல்-அமைச்சர் வேறு வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில், நேர்மையான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் மத்திய அரசை தைரியமாக எதிர்க்க முடிகின்றது. ஆனால் தமிழகத்தில், ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை. தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்.

இந்த காஞ்சி மண்ணிலே பிறந்த அறிஞர் அண்ணா, மதுவினால் வரும் பணம் அரசுக்கு தேவையில்லை என உறுதியாக செயல்பட்டார். ஆனால் அவர் வழியிலே செல்வதாக கூறும் தி.மு.க. தமிழகத்துக்கு மதுவினை அறிமுகப்படுத்தியது. எம்.ஜி.ஆர். மதுக்கடைகளை அதிகரித்தார். ஜெயலலிதாவோ, அரசாங்கமே மதுவை விற்கும் நிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையை பா.ம.க. மட்டுமே கொண்டுள்ளது.

சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவராக  இருக்கிறார்.

விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போய்விட்டார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்ற போவதாக பேசுகிறார்கள்.  இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.

டி.டி.வி.தினகரன் ஹவாலா பணத்தில் சுற்றி வருகின்றார். இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

நல்ல ஆட்சியை பா.ம.க.வால் மட்டுமே தரமுடியும். காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் பதவி விலக தேவையில்லை. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும்” என்று ராமதாஸ் பேசினார்.