சென்னை: தமிழ்நாட்டின் பல மாவடடங்களில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்று  19.10.2021:  சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 நாளை மற்றும் நாளை மறுதினம் : 20.10.2021 & 21.10.2021 அன்று  தென் மாவட்டங்கள்,  உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

22.10.2021: வெள்ளிக்கிழமை அன்று  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், நீலகிரி) மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் )மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23.10.2021: சனிக்கிழமை அன்று வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம் புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை – வங்கக் கடல் பகுதிகள்

20.10.2021, 21.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

20.10.2021, 21.10.2021:  கேரள கடலோரப் பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.