சென்னை,

வெள்ளப்பாதிப்பு குறித்து குஜராத்துக்கு பார்வையிட சென்ற ராகுல்காந்திமீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமையல் கேஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  சமையல் கேஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது.

சென்னையில் மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது  நாட்டை மொட்டை அடிக்கும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர், யசோதா, குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில், நேற்று குஜராத் சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பாரதியஜனதா கட்சியினரால் கல்வீசி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தமிழக காங்கிரசார், தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.