சென்னை: ஜனவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் , துணைத்தலைவர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியளார்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ் கூறியதாவது,
நிர்வாகிகள் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் பா.ஜ..க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன, அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர்.
‘அ.தி.மு.க. கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த இன்னும் முடிவு செய்ய முடியாமல்உள்ளனர், ஆனால், எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்பது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டது, இது எங்களுக்கு முதல்வெற்றி.
‘தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 3 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், தொடர்ந்து, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.