திருச்சூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல்காந்தி தனது பாரத் ஜோடா யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு அவசரமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை கடந்த 2019ம் ஆண்டு ராஜினாமா செய்த ராகுல்காந்தி, அந்த பதவியை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வரும் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் அதிகாரி மிஸ்திரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதற்கிடையில், குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, தற்போது கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தலைமை பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராகுல்காந்தி தனது நடை பயணத்தை ஒத்திவைத்து விட்டு அவசரமாக டெல்லி செல்கிறார்.  ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை ஒத்தி வைத்து விட்டு கட்சி தலைமை பதவிக்கான வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என நெருங்கிய கட்சி வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.

ஆனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் இருந்து ராகுல் காந்தி விலக வாய்ப்பில்லை என கேரள மாநில தகவல்கள்  தெரிவிக்கின்றன.ஆனால் அவரது திட்டங்களை ஏதும் வெளியிடப்படவில்லை.

பாரத் ஜோடோ யாத்திரை திட்டமிட்டபடி, வருகிற 29-ந்தேதி கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குள்  பயணிக்க தொடங்கும் என்றும், காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவித்தது. இந்நிலையில்,  ராகுலுடன் இணைந்து வருகிற 24-ந்தேதி முதல் பிரியங்கா காந்தியும் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.