சென்னை

காமராஜர் பிறந்த நாள் அன்று புதிய தமிழகம் கட்சியினர் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம்  நடத்த உள்ளனர்.

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“சமீபத்தில் தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது மது விலக்குக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தோன்றினாலும், ஏற்கெனவே மூடப்பட்ட கடைகள்,சரிவர விற்பனையாகாத கடைகள் போன்றவைதான் கணக்குக் காட்டப்பட்டுள்ளன. மேலும் இதில் வெளிப்படைத் தன்மை இல்லை.

வரும் ஜூலை 15- ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பெண்களை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

செந்தில் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து வேறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் திமுக அவரது உடல்நலத்தைக் காரணம் காட்டி,அவரது ஊழலை மறைக்க முயல்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ, ஆடிட்டர் ஜெனரல், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, செந்தில் பாலாஜியை முதல்வர் காப்பாற்ற நினைப்பது, ஆட்சிக்கு அழகல்ல. அவரை முதலில் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.”

எனக் கூறி உள்ளார்.