சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்?  என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதற்கு சசிகலா பதில் சொல்வாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுகவை  மீண்டும் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள சசிகலா, அதிமுகவின் பொன்விழாவை தனதுக்கு சாதமாக்க தனது ஆதரவாளர்களுடன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன காரணமாகவே ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி, எம்ஜிஆர் இல்லத்தில் கொடியேற்றுதல் போன்ற நிகழ்சிகளில் பங்கேற்று அனுதாபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கல்வெட்டு வைத்தார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என்று இடம்பெற்றுள்ளது. அவரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனரில் புரட்சித்தாய் என்று பதிவிடப்பட்டுள்ளது, கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

ஏற்கனவே  சசிகலாவைத் தியாகத் தலைவி என்று அவரது அடிவருடிகள் அழைத்து வந்தார்கள். அவர் என்ன தியாகம் செய்தார்? ஊழல்தானே செய்தார்? அதற்காக 4 வருடம் ஜெயிலில்தானே சிறைவாசம் அனுபவித்தார். அதனால், அவரை ஜெயில்தலைவி என்றே அழைக்க வேண்டும் என நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

அதற்கேற்றார்போல, சமீபத்தில், ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவர்,  சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்காதீர்கள் என்று கூறியிருந்தார். இது சசிகலாவுக்கு ‘சுர்ரென்று’ கோபத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனக்குத்தானே புரட்சித் தாய் என்ற அழைமொழியைத் சேர்த்துக்கொண்டுள்ளார்.

புரட்சித்தாய் என்ற அடைமொழியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சசிகலா என்ன புரட்சி செய்தார்? பெங்களூர் ஜெயிலில், வார்டன்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு, ஜெயிலை விட்டு ஜாலியாக ஊர் சுற்றியதை புரட்சி என்று சொல்கிறாரோ? என்று சமூக விலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொன்விழா கொண்டாட்டத்ரதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “என்ன புரட்சி செய்தார், என்பதற்காக சசிகலா புரட்சித் தாய் என்று பெயரை மாற்றியுள்ளார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

1996ஆம் ஆண்டு சசிகலா சார்ந்தவர்களால் தான் அதிமுக தோல்வியுற்றது. தனது குடும்பம் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். சசிகலாவால் கட்சிக்காரர்கள் அனுபவித்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது, வானத்திலிருந்து குதித்தது போல நான் தான் புரட்சித் தாய் என்று சொல்கிறார். என்ன புரட்சி செய்தார் என்பதற்காக இப்படி பெயரை மாற்றியுள்ளார்? தியாகத் தலைவி என்ற பெயரை விட்டுவிட்டார். கட்சிக்காக அவர் எந்த தியாகமும் செய்யவில்லை. அவரை யாரும் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியதுடன்  எம்.ஜி.ஆர் தான் புரட்சித்தலைவர் ஜெயலலிதா தான் புரட்சித்தலைவி என தெரிவித்து உள்ளார்.

அதிமுகவை உருவாக்கிய நடிகர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவர் என்று புகழப்பட்டார். அவர் திமுகவில் கருணாநிதிக்கு எதிராக புரட்சி செய்து, தனிக்கட்சி தொடங்கியதையும் கூறலாம், அதே நேரத்தில் அவர் நடித்த திரைப்படங்களும், ஏழை மக்களுக்காக புரட்சி செய்து நீதி கிடைக்கும் வகையில் இருந்தையும் காரணமாக கூறலாம்.

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை எடுத்துக்கொண்டால், அரசியலில் ஈடுபட்டு சில செயல்களை முன்னெடுத்து உள்ளதாலும், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நிழலாக வாழ்ந்தாலும், அவரை புரட்சித்தலைவி என அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், சசிகலாவை புரட்சித்தாய் என அழைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ஊழலின் தாய், அக்ரஹார சிறைத்தாய், மன்னார்குடி மாஃபியாவின் தாய்  என்று வேண்டுமானால் அழைக்கலாம்…

புரட்சித்தாய் என்ற பட்டத்தை தனக்கு தானேசூட்டிக்கொண்ட சசிகலாதான் பொதுமக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் பதில் கூற வேண்டும்… பதில் சொல்வாரா?