புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (54). இவர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், கடந்த 15ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது 16ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனி வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இரு நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று இரவு மருத்துவமனை கழிவறையில் ராஜசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மருத்துவ பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் மருத்துவமனை ஊழியர்களிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு இருக்கும் நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.