சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இன்புளுயன்ஸா காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது நல்லது என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் உருமாறிய கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.   தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்  தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,927 என்றும், கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,818 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,61,922 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,65,34,827 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,117 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் நேற்று  86 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த   கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500 ஐத் தாண்டி 517 ஆக உயர்ந்துள்ளது, நேற்று  3,162 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆர்டிபிசிஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை,  வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் 2 சதவிகித்தை தாண்டி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக  நேற்று சென்னையில் 19 பேருக்கும் , செங்கல்பட்டில் 12, சேலம் மற்றும் கோவையில் தலா 8, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருவள்ளூரில் தலா 5 கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. ஈரோட்டில் மூன்று புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மாநிலத்தின் மற்ற 17 மாவட்டங்களில் ஒன்று முதல் இரண்டு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் ரேண்டம் சோதனையின் போது ஓமன் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது  517 செயலில் உள்ள பாதிப்புகளில், அவர்களில் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர், இதில் யாரும் ஆக்ஸிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சையில் இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  ‘இன்சகாக்’ எனப்படும் இந்திய கொரோனா பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, எக்ஸ்.பி.பி., – 1.16 என்ற புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.