சென்னை: பொதுத்துறை நிறுவனங்களின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பும் வகையிலான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி-யே இனி நிரப்பும் இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்பு களின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பு குறித்த சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார். இச்சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழ்நாட்டில் எல்லா அரசு பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டுமே. மாநகரம், பல்கலை கழகம் ஆகியவற்றிலும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்ப ட்டு வருகின்றன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதன்படி அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து 19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும் படியாக கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக 182 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.