சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதையடுத்து, பொதுத்தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. 2வது திருப்புதல் தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை  நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.