சென்னை: தமிழகத்தில் 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  அன்பில் மகேஷ், ” அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் யார் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியவர், மாணவியின்  மன உளைச்சலுக்கு காரணம் வார்டன்தான் என்றவர், மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் விசாரணை மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறை தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசியவர், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும்  10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பாடங்களை முடிக்க வேண்டியதும் உள்ளது.  10 ,11, 12ம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வானது  நேரடித் தேர்வாக நடத்த திட்டமிட்டு வருகிறோம், அதன்படி, மே மாதத் தொடக்கத்திலோ  அல்லது இறுதியிலோ பொதுத்தேர்வு நடைபெறலாம். எப்படியிருந்தாலும் 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும். இதுகுறித்தும், பள்ளிகள் திறப்பது குறித்தும் விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.