சென்னை

ங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு  வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7 நாட்களாja சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அத்துடன், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

நேற்று இவ்வாறு போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.

இன்று, சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களைப் பேருந்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

போராட்டத்தில்  கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்  தங்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.