ஆரணி மாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருங்கூரை சேர்ந்தவர் அரிவிழிவேந்தன். இவரது மனைவி ஜமுனா (வயது 29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து குடும்பத்தினர் ஜமுனாவை மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அனுமதித்தனர்.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லை. இதனால் அங்குள்ள நர்சுகள் பிரசவம் பார்த்தனர். ஜமுனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஜமுனாவிற்கு நச்சு குடல் வெளியே வரவில்லை. இதையடுத்து நர்சுகள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜமுனாவிற்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு ஜமுனாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜமுனா இறந்துவிட்டதாக கூறினர். குழந்தை பிறந்த சந்தோ‌ஷத்தில் இருந்த உறவினர்கள் தாய் இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஜமுனாவின் சாவிற்கு ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அளித்த தவறான சிகிச்சையே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.